உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில், ஹத்ராஸ் வழக்கை விசாரிக்க நியமித்திருந்த சிறப்பு விசாரணைக் குழுவைச் சேர்ந்த புஷ்பா பிரகாஷ் என்ற பெண் அதிகாரி அவர் வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டார்.
அண்மையில் ஹத்ராசில் இளம்பெண் ஒருவரை வயல்வெளியில் சிலர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததன் தொடர்பில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அந்தப் பெண் உயிரிழந்ததையடுத்து, குடும்பத்தாரின் விருப்பங்களுக்கு மாறாக போலிசாரே அந்தப் பெண்ணின் சடலத்தை எரித்ததாகக் கூறப்பட்டது. அதன் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவைச் சேர்ந்தவர் புஷ்பா பிரகாஷ்.
உன்னாவ்வில் உள்ள போலிஸ் பயிற்சிப் பள்ளியில் பணிபுரிந்துவருகிறார் டிஐஜி சந்திர பிரகாஷ். அவருடைய மனைவி புஷ்பா பிரகாஷ், 36. இவர்களுக்கு 7, 11, 13 வயதுகளில் மூன்று பெண் குழந்தைகள் இருக்கின்றனர்.
காலை சந்திர பிரகாஷ் வேலைக்கு சென்றபின்பு புஷ்பா தனது வீட்டில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
திருமதி புஷ்பாவின் உடல் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவரது மரணத்துக்குக் காரணம் என்ன என்பது பற்றிய தகவல் ஏதும் இல்லை.