பாதுகாப்புக்கு மிரட்டல் விடுக்கும் சீனாவின் போக்குக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்திய, அமெரிக்க வெளியுறவு, பாதுகாப்பு அமைச்சுகளுக்கிடையே நடைபெற்று வரும் ‘2+2’ உயர்மட்டப் பேச்சு வார்த்தையின்போது அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்தியத் தலைநகர் டெல்லியில் நடைபெறும் இந்தப் பேச்சு வார்த்தையில் ஓர் அங்கமாக, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ, தற்காப்பு அமைச்சர் மார்க் டி எஸ்பர் இருவரும் இந்தியத் தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் நேற்று நடத்திய கூட்டு ஆலோசனைக் கூட்டத்தில் இரு நாடுகளுக்குமிடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
“இந்தியா, அமெரிக்கா போன்ற தலைசிறந்த இரு ஜனநாயக நாடுகள் மேலும் நெருக்கமாக, புதியதொரு வாய்ப்பு இது,” என்று பின்னர் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் திரு பொம்பியோ கூறினார்.
“சீனாவின் வூகான் மாநிலத்தின் உருவான கொரோனா கொள்ளைநோயை ஒழிப்பதில் ஒருங்கிணைந்து செயல்படுவது முதல் பாதுகாப்புக்கும் சுதந்திரத்திற்கும் சீன கம்யூனிச அரசின் அச்சுறுத்தல், இந்த வட்டாரத்தில் அமைதியையும் நிலைத்தன்மையையும் ஊக்குவிப்பது வரை விவாதிக்கப்பட்டது,” என்று அவர் சொன்னார்.
அன்றைய நாளின் சவால்களை எதிர்கொள்வதற்கும், சுதந்திரமான, வெளிப்படையான இந்தோ-பசிபிக் கொள்கைகளை எதிர்காலத்தில் நிலைநிறுத்துவதற்கும் அண்மைக் காலமாக சீனாவுடன் எல்லைத் தகராறில் ஈடுபட்டுள்ள இந்தியாவுடன் வலுவான உறவுகளை ஏற்படுத்த விரும்புவதாக திரு மார்க் டி கூறினார்.
இப்பேச்சு வார்த்தையில் இரு நாடுகளும் முக்கிய, ரகசிய தரவு களைப் பரிமாறிக்கொள்ள உடன்பட்டுள்ளன. இரு நாட்டு வரைபடத் தரவுகளையும் பகிர்ந்துகொள்ள சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு ராணுவ ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.
பொம்பியோவுடனான கூட்டங்களுங்குப் பிறகு, இருநாட்டு உறவும் கணிசமான வளர்ச்சியைக் கண்டுள்ளதாக திரு ஜெய்சங்கர் டுவீட் செய்தார்.
அடுத்த வாரம் அமெரிக்கத் தேர்தல் நடைபெற உள்ள நேரத்தில், இந்தியாவுடன் அந்நாடு பேச்சுவார்த்தை நடத்துவது முக்கியமாகக் கருதப்படுகிறது. தமது தேர்தல் பிரசாரத்தின் முக்கியகூறாக, சீனாவைக் கையிலெடுத்திருந்தார் அதிபர் டோனால்ட் டிரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது.