ஐந்தாண்டுகளாகத் தொடர்ந்த காதல்.
நவம்பர் 22ல் திருமணம்.
மகிழ்ச்சியுடன் இருவீட்டாரும் சேர்ந்து திருமணத்துக்கு முந்தைய புகைப்படப் பிடிப்புக்காகச் சென்றனர் சந்துரு - சசிகலா ஜோடி.
மைசூருக்கு அருகில் திருமகுடலு நார்சிபுராவில் உள்ள கையடமரனஹல்லி கிராமத்தைச் சேர்ந்த இரு குடும்பத்தாரும் காவிரி உற்பத்தியாவதாகக் கூறப்படும் தலக்காட்டில் உள்ள ஆற்றுப் பகுதியில் புகைப்படம் எடுக்கச் சென்றனர்.
புகைப்படம் எடுப்பதற்காக ஆற்றுக்குள் படகில் சென்றனர் 28 வயது சந்துருவும் 20 வயது சசிகலாவும்.
குடும்பத்தார் அனைவரும் பார்த்துக்கொண்டிருந்த வேளையில், படகின் ஓரத்தில் அமர்ந்து புகைப்படம் எடுக்க முயற்சி செய்தபோது, படகில் சமநிலை தவறியதில் படகு ஆற்றில் கவிழ்ந்தது.
அண்மையில் பெய்த மழை காரணமாக, ஆற்றில் நீர் வரத்து அதிகமாக இருந்ததாகக் கூறப்பட்டது.
சந்துருவும் சசிகலாவும் சடலமாகவே கரைக்கு திரும்ப முடிந்தது. மீனவர்கள், தீயணைப்புப் படையினரின் உதவியுடன் அவர்களது சடலத்தை போலிசார் மீட்டனர்.
படகை ஓட்டிச் சென்ற நபர், ஆற்றின் போக்கிலிருந்து தப்பி, எதிர்நீச்சல் போட்டு தப்பினார்.
பெற்றோரின் கண் முன்னே நிகழ்ந்த அசம்பாவிதத்தால் இருவீட்டாரும் சொல்லவொண்ணா துயரத்தில் மூழ்கினர்.