இந்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் அமைதிவழியில் போராட்டம் நடத்த விவசாயிகளுக்கு நேற்று அனுமதி வழங்கப்பட்டது.
இந்திய அரசு அண்மையில் நிறைவேற்றிய மூன்று மசோதாக்களைத் திரும்பப் பெறக் கோரி வடமாநில விவசாயிகள், குறிப்பாக பஞ்சாப் மாநில விவசாயிகள் கடந்த இரு மாதங்களாகப் போராட்டம் நடத்தி வந்தனர்.
ஆயினும், மத்திய அரசு தங்கள் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்காத நிலையில் 'டெல்லி செல்வோம்' போராட்டத்திற்குப் பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் அழைப்பு விடுத்தனர். இதையடுத்து, நேற்று முன்தினத்தில் இருந்து விவசாயிகள் டெல்லியை நோக்கிப் படையெடுத்தனர்.
இதைத் தொடர்ந்து, டெல்லிக்குள் அவர்களை நுழையவிடாமல் தடுக்க மாநில எல்லைப் பகுதிகள் தடுப்புகள் அமைக்கப்பட்டு, போலிசார் குவிக்கப்பட்டனர். அதையெல்லாம் மீறி டெல்லிக்குள் செல்ல விவசாயிகள் முயல, கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியும் தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் தடியடி நடத்தியும் போலிசார் அவர்களைக் கலைக்க முயன்றனர். இதற்கு, டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி உட்பட எதிர்க்கட்சிகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில், நேற்று 2ஆம் நாளாக விவசாயிகள் தேவையான உணவுப்பொருள்களுடன் டெல்லி நோக்கி விரைந்தனர். ஒருவழியாக, டெல்லியின் புராரியில் உள்ள நிரங்காரி திடலில் விவசாயிகள் கூடி, அமைதியாகப் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது.
முன்னதாக, டெல்லியில் உள்ள ஒன்பது திடல்களைத் தற்காலிகச் சிறைச்சாலைகளாக மாற்ற டெல்லி அரசிடம் போலிஸ் அனுமதி கோரியது. ஆனால், போராட்டம் நடத்த விவசாயிகளுக்கு உரிமையுண்டு எனக் கூறி, முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு அதனை ஏற்க மறுத்துவிட்டது.

