உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஒரு சிறுமியின் சடலத்தைத் தெரு நாய் கடிப்பதைக் காட்டும் காணொளி பெரும் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.
மருத்துவமனையின் ஒதுக்கப்பட்ட பகுதியில் வைக்கப்பட்டிருந்த தூக்குப் படுக்கையில் நேற்று முன்தினம் வெள்ளைத் துணியில் மூடப்பட்ட சடலத்தை தெருநாய் கடிப்பது அந்த 20 விநாடி காணொளியில் பதிவானது. சாலை விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்ததாக முதல்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் சிறுமி உயிரிழந்தாரா அல்லது மருத்துவமனையில் உயிர்பிரிந்ததா என்று கூறப்படவில்லை.
சிறுமியின் தந்தை சரண் சிங், "ஒன்றரை மணி நேரமாக எனது மகளின் உடல் கண்டுகொள்ளப்படவில்லை. இதற்கு மருத்துவமனையின் அலட்சியமே காரணம்," என்று கண்ணீர்மல்க தெரிவித்தார். மருத்துவமனையில் தெருநாய்கள் தொல்லை இருப்பதை மருத்துவமனை நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது.
இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் மருத்துவர் சுஷில் வர்மா கூறுகையில், "வழக்கமான நடைமுறைகளுக்குப் பிறகு உடல் குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் பிரேதப் பரிசோதனை செய்யவேண்டாம் என்று தெரிவித்து விட்டார்கள். சடலத்தின் அருகே யாரும் இல்லாதபோது இந்தச் சம்பவம் நடைபெற்றதாக தெரிகிறது," என்றார்.

