பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே பிரம்மாண்ட அணையைக் கட்ட சீனா திட்டமிடுவதாக வெளியான தகவல் இந்தியத் தரப்புக்கு அதிர்ச்சி அளித்துள்ளதாக சீன ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.
பிரம்மாண்ட அணையைக் கட்டும் திட்டத்தை சீனா அடுத்தாண்டு முதல் செயல்படுத்த இருப்பதாகவும் இதுகுறித்து அந்நாட்டின் 14வது ஐந்தாண்டுத் திட்டத்தில் மிக விரிவான தகவல்கள் இடம்பெற்றிருப்பதாகவும் அந்த ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
சீனா பெரிய அணையைக் கட்டும் பட்சத்தில் பிரம்மபுத்திரா நதி பாயும் நாடுகளான இந்தியா, பங்ளாதேஷ் ஆகியவற்றுக்குச் செல்லும் நீரை அந்நாடு தடுத்து நிறுத்த முடியும். இதனால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீனாவின் எரிசக்தி கட்டுமான வாரியத்தின் தலைவர் யான் ஜியோங், பிரம்மபுத்திரா ஆற்றின் கீழ்ப்பகுதியில் புதிய நீர் மின்சக்தித் திட்டத்தைச் செயல்படுத்த இருப்பதாகக் கூறினார்.
மேலும், சீனாவின் நீர்வளம் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பைப் பராமரிக்கும் வகையில் இந்த அணைத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையே பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே அணை கட்டும் சீனாவின் திட்டத்துக்கு இந்தியாவும் பங்ளாதேஷும் எதிர்ப்புத் தெரிவிப்பதாக கூறப்படுகிறது.