புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தும் போராட்டம் நீடித்து வருகிறது. முன்னதாக மத்திய அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், நேற்றும் டெல்லியின் எல்லைப் பகுதிகளை முடக்கும் வகையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏழாவது நாளான நேற்று டெல்லி புறநகர்ப்பகுதியான புராரியில் சந்த் நிரங்கரி சமகம் பகுதியில் போராட்டம் நடைபெற்றது.
உத்தரப்பிரதேச, ராஜஸ்தான் மாநில விவசாயிகளும் நேற்று போராட்டக் களத்தில் அதிக எண்ணிக்கையில் இணைந்தனர்.
விவசாயிகள் இரண்டு மாதங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களுடன் குவிந்திருப்பதாகக் கூறப்படும் நிலையில், 3 சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கையை மட்டுமே வலியுறுத்தி வருகின்றனர். புதிய வேளாண் சட்டங்களில் உள்ள குறிப்பிட்ட பிரச்சினைகளை கண்டறிந்து அரசிடம் தெரிவிக்கும் படி விவசாய சங்கங்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.