சீனா தயாரித்துள்ள ஆளில்லா உளவு விமானங்களைப் பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவை உளவு பார்ப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக உளவு அமைப்புகள் மத்திய அரசை எச்சரித்துள்ளன.
அண்மையில் காஷ்மீரின் ஆர்னியா பகுதியில் உள்ள அனைத்துலக எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டின் வழி பாகிஸ்தானின் ஆளில்லா சிறிய ரக உளவு விமானம் ஊடுருவியது.
இதையடுத்து பாதுகாப்புப் படையினர் அதை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் அந்த விமானம் திரும்பிச் சென்றது. தற்போது எல்லையில் பாதுகாப்பும் கண்காணிப்பும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் அந்த உளவு விமானம் சீனத் தயாரிப்பு என்றும் காஷ்மீரில் சதி வேலைகளை அரங்கேற்ற பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பு இதைப் பயன்படுத்துகிறது என்றும் உளவுத்துறை தெரிவித்துள்ளது.
அடுத்த இரு மாதங்களுக்கு பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்றும் பயங்கரவாதிகளும் பாகிஸ்தான் உளவு அமைப்பும் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளில் ஆளில்லா உளவு விமானங்களை அதிகளவில் பயன்படுத்த வாய்ப்புள்ளது என்றும் மத்திய அரசை உளவுத்துறை உஷார்படுத்தி உள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் சீனாவில் தயாரிக்கப்பட்ட 4 ஆயுதங்களுடன் கூடிய ஆளில்லா விமானங்கள் பஞ்சாபில் கைப்பற்றப்பட்டுள்ளன.
எனவே ஊடுருவல் அதிகம் உள்ள பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.