இந்தியா-சீனா இடையேயான உறவு நடப்பாண்டில் பெரிதும் சீர்குலைந்துள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இரு தரப்புக்கும் இடையேயான உறவு கடினமான காலகட்டத்தில் இருப்பதாகவும் இணைய வழியிலான கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது அவர் குறிப்பிட்டார்.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் அமைதியைப் பராமரிப்பதுதான் மற்ற துறைகளில் இருதரப்பு உறவு வளர்வதற்கு அடிப்படையாக இருக்கும் என்று குறிப்பிட்ட அவர், இதுதான் இந்தியாவின் நிலைப்பாடு என்றார்.
எல்லையில் தற்போதுள்ள நிலைமை நீடிப்பதை அனுமதிக்க இயலாது என்றும் பல ஆண்டுகளாக சீனாவுடனான உறவில் பிரச்சினைகள் நீடித்த போதிலும் வர்த்தகம், சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் உறவு வளர்ந்து வந்ததாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.
எல்லையில் அமைதியைப் பராமரிக்க சில ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாக நினைவு கூர்ந்த அவர், எல்லையில் படைகளைக் குவிக்கக்கூடாது என கடந்த 1993ஆம் ஆண்டில் இருந்தே ஒப்பந்தங்கள் செய்துகொள்ளப்பட்டு வந்ததாகத் தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தங்களை மீறி பல்லாயிரக்கணக்கான துருப்புகளை லடாக் எல்லைக் கோட்டுப் பகுதியில் சீனா குவித்துள்ளதாகச் சாடிய அவர், இதுதொடர்பாக சீனத்தரப்பு ஐந்து முரண்பட்ட விளக்கங்களை அளித்திருப்பதாகக் கூறினார்.
“சீனாவின் செயல்பாடு ஒப்பந்தங்களை மீறியுள்ளது. இதனால்தான் இருதரப்பு உறவு இயல்பாகவே பாதிக்கப்பட்டுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் 20 இந்திய வீரர்கள் பலியாகினர். இது நமது தேசிய மனநிலையை முற்றிலும் மாற்றிவிட்டது,” என்றார் ஜெய்சங்கர்.