லடாக் எல்லைப் பகுதியில் நிலவும் பதற்றத்துக்கு மத்தியில் இந்திய எல்லைக்கு என புதிய ராணுவத் தளபதியை நியமித்துள்ளது சீனா.
இதையடுத்து இருதரப்புக்கும் இடையேயான பதற்றம் மெல்ல தணியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லடாக் மோதல் நிகழ்ந்தபோது ஜெனரல் ஸாவோ ஜாங்கி சீனப் படைக்குத் தலைமை ஏற்றிருந்தார். அவரது கண்காணிப்பில்தான் கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் ராணுவப் பயிற்சி மேற்கொள்ள ஆயிரக்கணக்கான வீரர்கள் குவிக்கப்பட்டனர். இதையடுத்து இந்தியாவும் எல்லையில் துருப்புக்களைக் குவித்ததால் பதற்றம் ஏற்பட்டது.
கடந்த 2017ஆம் ஆண்டு டோக்லாம் பகுதியில் சீனத்துருப்புக்கள் அத்துமீறியதும் ஸாவோ ஜாங்கியின் கண்காணிப்பின் பேரிலேயே நிகழ்ந்தது.
இவர் இந்தியாவுக்கும் பூட்டானுக்கும் எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவராகக் கருதப்படுகிறது. எனவே இவர் தளபதி பொறுப்பில் இருந்து விலக்கப்பட்டது முக்கியத்துவம் பெறுகிறது.
கடந்த மே மாதத்திலிருந்து நீடித்துவரும் பதற்றத்தைத் தணிக்க தூதரக அளவிலும் ராணுவ மட்டத்திலும் தொடர் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இந்திய எல்லைப் பகுதிக்கான தளபதியாக இருந்த ஸாவோ ஜாங்கியை அப்பொறுப்பில் இருந்து விடுவித்து, ஜெனரல் ஸாங் ஷுடோங்கை நியமித்துள்ளார் சீன அதிபர்.