மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனது உணவில் விஷம் கலக்கப்பட்டதாக இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தின் (இஸ்ரோ) மூத்த விஞ்ஞானி தபான் மிஸ்ரா தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக அவர் தமது சமூக வலைத்தளப் பக்கத்தில் 'லாங்க் கெப்ட் சீக்ரெட்' என்ற தலைப்பில் முக்கிய விவரங்களைப் பதிவிட்டுள்ளார்.
கடந்த 2017ஆம் ஆண்டு பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தில் நடைபெற்ற பதவி உயர்வுக்கான நேர்காணலில் இவர் கலந்து கொண்டார். அச்சமயம் தமக்கு அளிக்கப்பட்ட உணவில் 'ஆர்சனிக் ட்ரொக்ஸைடு' என்ற விஷம் கலக்கப்பட்டது என்கிறார் தபான்.
தோசை மற்றும் சட்னியில் கலக்கப்பட்ட விஷத்தால் தமக்கு கடும் சுவாசக் கோளாறு, வயிற்று வலி, அசாதாரண தோல் வெடிப்புகள் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் மத்திய உள்துறை பாதுகாப்புப் பணியாளர்கள் மூலம் விஷம் கலக்கப்பட்டது தமக்குத் தெரிய வந்ததாகவும் தபான் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர் மருத்துவ சிகிச்சை பெற்று குணமடைந்த தபான், நடந்த சம்பவத்தின் நோக்கம் உளவுத் தாக்குதலாக இருந்திருக்கலாம் என்று சந்தேகம் கிளப்பியுள்ளார். அதற்கு ஆதாரமாக மருத்துவ அறிக்கை ஒன்றையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் அவர்.
ராணுவம் மற்றும் பொருளாதார முக்கியத்துவம் கொண்ட நடவடிக்கைகளுக்கு முக்கிய பங்களிப்பை அளிக்கும் ஒரு விஞ்ஞானியை அந்தப் பயணத்தில் இருந்து அகற்றுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களைக் கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரோவில் மூத்த விஞ்ஞானியாக பணியாற்றி வரும் தபான் மிஸ்ராவின் சமூக வலைத்தளப் பதிவு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. எனினும் அவர் வெளியிட்டுள்ள தகவல்கள் குறித்து இஸ்ரோ நிர்வாகம் இன்னும் விளக்கம் அளிக்கவில்லை.
இஸ்ரோவின் விண்வெளி பயன்பாட்டு மையத்தின் இயக்குநராக முன்பு பொறுப்பு வகித்த இவர் விக்ரம் சாராபாய் ஆராய்ச்சி விருது, இஸ்ரோ மெரிட் விருது உள்ளிட்ட விருதுகளைப் பெற்றவர் ஆவார்.
மேலும் 'ரேடார் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதில் நிபுணத்துவம் வாய்ந்தவர். இதனால் தனது உணவில் விஷம் கலந்தவர்கள் தம்மைக் குறி வைத்திருக்கலாம் என்றும் தபான் கூறியுள்ளார்.

