வரும் மார்ச் மாதத்துக்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவது தொடர்பான ஒப்பந்தம் இறுதியாகும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
உலக தரத்தில் நவீன வசதிகளுடன் 750 படுக்கைகள், 100 மருத்துவப் படிப்புகளுடன் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை தோப்பூரில் கட்டப்பட உள்ளது.
தமிழகம் மட்டுமின்றி தென்னிந்தியாவின் மருத்துவத் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் மதுரை தோப்பூரில் 224.24 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. அதற்குப் பின்னர் அங்கு பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
பிரதமர் மோடி கலந்துகொண்டு எய்ம்ஸ் கட்டுமான பணிகளுக்கு அடிக்கல் நாட்டி ஈராண்டுகள் நிறைவடைந்துவிட்டது.
45 மாதங்களில் பணிகள் நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என அடிக்கல் நாட்டியபோது மத்திய அரசு அறிவித்த நிலையில், 24 மாதங்கள் ஆகியும் இதுவரை முதல்கட்ட பணிகள்கூட தொடங்கப்படவில்லை.
இதுகுறித்து பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், இந்தப் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.