விவசாயிகள் போராட்டத்தால் மூண்ட வன்முறை தொடர்பில் 44 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அடுத்தகட்டமாக விவசாயிகள் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேச விவசாயிகள் டெல்லி எல்லைகளில் முற்றுகையிட்டு இரு மாதங்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் 11 தடவை பேச்சுவார்த்தை நடைபெற்றும் எந்த முடிவும் எட்டப்படாததால் விவசாயிகள் போராட்டம் நீடித்த வண்ணம் உள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை குடியரசு தினம் கொண்டாடப்பட்ட வேளையில் விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். பேரணியில் பெரும் வன்முறை வெடித்தது. ஒருவர் கொல்லப்பட்டார். 500 போலிசார் காயமுற்றனர். 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் நொறுக்கப்பட்டன. வன்முறை தொடர்பாக போலிசார் 33 வழக்குகள் பதிவு செய்து விவசாய சங்கத் தலைவர்களுக்கு எச்சரிக்கைக் கடிதம் அனுப்பினர்.இது விவசாயிகளை மேலும் ஆத்திரமடைய செய்துள்ளது. இதனால் போராட்டத்தை தீவிரப்படுத்த ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேச மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை நோக்கி புறப்பட்டுள்ளனர். கூடுதலாக மூன்று லட்சம் பேரை திரட்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.
மகாத்மா காந்தியின் நினைவு தினமான இன்று காலை 9 மணிக்கு விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். மாலை வரை அது நீடித்தது. தொடர் போராட்டம் காரணமாக டெல்லி புறநகரில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது.
எல்லைப் பகுதிகளான டிக்ரி, சிங்கு, காசியாபாத், மீரட் விரைவுச் சாலை உள்ளிட்ட இடங்களில் போலிசாரும் துணை ராணுவப் படை வீரா்களும் குவிக்கப்பட்டுள்ளனா். போராட்டம் நடைபெறும் சிங்கு, காசிபூர் மற்றும் டிக்ரி ஆகிய எல்லைப் பகுதிகளில் இன்று காலை முதல் நாளை இரவு 9 மணி வரை இணையச் சேவை முடக்கப்படும் என உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள 44 பேரில் பிரதீப் பலிவால் என்னும் போலிஸ் அதிகாரியை கூர்மையான வாளால் தாக்கிய 22 வயது இளையரும் அடங்குவார். பஞ்சாப் மாநிலம் காஸம்புர் கிராமத்தைச் சேர்ந்த பி.எஸ். ரகு என அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.