சீன பீரங்கிப் படைகளை அந்நாடு எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதியில் இருந்து மீட்டுக்கொள்ள ஒப்புக் கொண்டது. அப்பகுதியிலிருந்து தனது படைகளை பின்வாங்கிக் கொள்ள இந்திய ராணுவமும் ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால், சீன ராணுவம் படைகளை திரும்பப் பெற்றால் மட்டுமே, இந்திய ராணுவம் தனது படைகளைத் திரும்பப் பெற்றுக்கொள்ளும் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே உள்ள லடாக் எல்லையில் உள்ள பாங்கோங் ஏரி பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றதால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளும் மோதலும் ஏற்பட்டது.
கடந்த ஜூன் மாதம் நடந்த இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இதனால் எல்லையில் பதற்றம் மேலும் அதிகரித்தது.
லடாக் எல்லைப்பகுதியில் சீன ராணுவம் ஏராளமான வீரர்களை குவித்தது.
எல்லைப் பகுதியில் இந்திய வீரர்கள் சுற்றுக்காவல் பணியை மேற்கொள்வதற்கும் சீனா இடையூறு செய்துவந்தது.
இதைத்தொடர்ந்து, சீனாவின் அச்சுறுத்தலைச் சமாளிக்க இந்தியாவும் அங்கு படைகளைக் குவித்தது. இதனால் எல்லையில் பங்கோங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு, டெம்சோக் ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட பதற்றத்தை தணித்து, இரு நாடுகளும் படைகளை விலக்கிக்கொள்வது தொடர்பாக ராணுவ அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
இரு நாடுகளின் ராணுவத் தளபதிகள் மட்டத்தில் பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்தது.
கடைசியாக நடந்த 9வது சுற்றுப் பேச்சில் அந்த இரு நாட்டு ராணுவத் தலைவர்களும் சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் இருந்து படைகளை மீட்டுக்கொள்ள சம்மதித்ததாகத் தெரிகிறது.
அதனையடுத்து பாங்கோங் ஏரி பகுதியில் இரு நாடுகளும் படைகளை மீட்டுக்கொள்ள தொடங்கியுள்ளன. இதன் மூலம் எல்லையில் படிப்படியாக அமைதியான சூழல் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது. பாங்கோங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்குக் கரைப் பகுதியில் எல்லைக் காவலில் ஈடுபட்டுள்ள இரு நாட்டுப் படையினரும் விலகத் தொடங்கியதாக சீன பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் கூறி உள்ளார்.
பதற்றமான பகுதிகளில் இருந்து மீட்டுக்கொள்ளப்படும் இரு நாட்டு வீரர்களும், எல்லையில் உள்ள தத்தம் முந்தைய நிலைகளுக்குச் சென்று பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவர் என்று கூறப்படுகிறது.