அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அங்குள்ள முக்கிய ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ராஜ்கோட், ஜாம்னா நகர் மாவட்டங்களில் உள்ள தாழ்வான பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
பல அடி உயரத்துக்கு வெள்ள நீர் தேங்கி இருப்பதாலும் இடைவிடாமல் மழை நீடித்து வருவதாலும் பொதுமக்கள் உயிருக்கு அஞ்சி வீட்டின் மாடிகளில் தங்கி உள்ளனர்.
இவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை தேசிய, மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் விநியோகித்து வருகின்றனர்.
மேலும், மீட்புப் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. விமானப் படை ஹெலிகாப்டர்களும் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், இதுவரை ஆயிரக்கணக்கானோர் மீட்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜ்கோட் மாவட்டத்தில் மட்டும் திங்கட்கிழமை ஒரே நாளில் 43 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளது.
இந்நிலையில், ஆறுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல ஊர்களில் வெள்ள நீர் புகுந்தது. இதனால் ஏராளமான வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டன.
அப்போது ஒரு காரில் இருந்த பெண்ணும் இரண்டு ஆடவர்களும் வெள்ளத்தில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
இதற்கிடையே, நாடு முழுவதும் மழை, வெள்ளம் காரணமாக கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 6,800க்கும் அதிகமானோர் உயிரிழந்துவிட்டனர் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மிக அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 964 பேர் பலியாகிவிட்டதாக தெரிய வந்துள்ளது.
மத்தியப் பிரதேசம் 917 பேருடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. கேரளாவில் 708 பேர் வெள்ளத்துக்கு பலியாகிவிட்டதாக தரவுகள் தெரிவிக்கின்றன.