ஆந்திராவின் சித்தூர், கடப்பா ஆகிய மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வந்தது. நேற்று மாலை முதல் அது தொடர் மழையாக மாறி அனைத்து பகுதிகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இந்த நிலையில், கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் திருப்பதியில் உள்ள சிவஜோதி நகரில் எருமைகள் இழுத்துச் செல்லப்பட்டன.
கடப்பா, திருப்பதி இடையே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நபர் ஒருவரை மழை, வெள்ளம் இழுத்துச் சென்றது. திருப்பதியில் உள்ள பல்வேறு பகுதிகளில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்களையும் மழை, வெள்ளம் இழுத்துச் சென்றது.
திருப்பதியை பொறுத்தவரை, இதுபோன்ற அதி கனமழை இதற்கு முன்னர் எப்போதும் பெய்ததில்லை என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.
நகரைச் சுற்றி இருந்த ஏரிகள், குளங்கள் ஆகியவை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதே திருப்பதியில் கடும் வெள்ளத்திற்கு காரணம் என்று மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.