புதுடெல்லி: கடந்த 2007ல் ராஜஸ்தானில் நடந்த எய்ட்ஸ் விழிப் புணர்வு நிகழ்ச்சியில் நடிகை ஷில்பா ஷெட்டியை ஹாலிவுட் பிரபல அமெரிக்க நடிகரான ரிச்சர்ட் கீர் பொதுமேடையில் கட்டி யணைத்து முத்தம் கொடுத்தார். இந்த முத்தக்காட்சிகள் அப்போது ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து பொது இடத்தில் ஆபாசமாக நடந்துகொண்டதாக நடிகை ஷில்பா ஷெட்டி மீது இந்திய சட்டப்பிரிவுகள் 292, 293 மற்றும் 294 ஆகியவற்றின் கீழ் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை ஷில்பா ஷெட்டி மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு மாற்றியிருந்தார். தனது மனுவில் ஹாலிவுட் நடிகர் முத்தமிட்டபோது தான் தடுக்கவில்லை என்றுதான் தன் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் வழக்குத்தொடுக்கப்பட்ட சட்டப் பிரிவுகளின்கீழ் தான் எந்த குற்றமும் செய்யவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. புகாரில் கூறப்பட்ட குற்றங்களில் ஒன்றுகூட திருப்தி அளிக்கவில்லை என்று கூறிய மாஜிஸ்திரேட் நீதிமன்றம், ஷில்பா ஷெட்டி எந்தக் குற்றமும் செய்யவில்லை என்று தெரிவித்தது. இதையடுத்து 15 ஆண்டு வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.

