அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்தவர்களில் 30 பேர் பலியாகினர்.
இதையடுத்து கள்ளச்சாராயம் காய்ச்சியவர்களை அம்மாநில காவல்துறை வலைவீசி தேடி வருகிறது.
குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ளது. இதனால் கள்ளச்சாராயம் தயாரிப்போர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்பதால் அம்மாநில காவல்துறையினர் எப்போதுமே தீவிர கண்காணிப்பை மேற்கொள்வர்.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக அகமதாபாத், போட்டட் மாவட்டங்களில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட கள்ளச்சாராயம் விற்கப்பட்டுள்ளது. இதை அப்பகுதிகளைச் சேர்ந்த பலரும் வாங்கிக் குடித்துள்ளனர்.
ஆனால் அந்தச் சாராயமே அவர்களுக்கு நஞ்சானது. கள்ளச்சாராயம் குடித்த சில மணி நேரங்களில் உடல்நலக் குறைவு, மயக்கம் காரணமாக பலருக்கு அவதி தொடங்கியது. அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஐம்பது பேருக்கும் மேல் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படும் நிலையில், முப்பது பேர் மாண்டுவிட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

