சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் இடைவிடாது பெய்யும் கனமழையால் பல பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
41 பேர் உயிரிழந்ததாகவும் 1,616 பேர் நிவாரண நிலையங்களில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் ஊடகங்கள் கூறுகின்றன.
ரூப்நகர், ஃபெரோஸ்பூர், பாட்டியாலா, மோகா, லூதியானா, ஜலந்தர், பத்தான்கோட் உள்ளிட்ட 19 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
பஞ்சாப் மாநில மின்வாரியக் கட்டடம் அதிகம் சேதமடைந்ததாகக் கூறப்பட்டது.
கிட்டத்தட்ட 16 கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன. மின்கம்பங்கள் சாய்ந்ததுடன் மின்மாற்றிக் கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன.
துணை மின்நிலையங்களில் வெள்ளம் புகுந்ததால் மின்னிணைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மாநில மின்துறை அமைச்சர் ஹர்பஜன் சிங், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் மின்விநியோகம் வழக்கநிலைக்குத் திரும்பியதாகக் கூறினார்.

