சிறார் காப்பகத்தில் கொடூரம்; அதிகாரி இடைநீக்கம், விசாரணை

2 mins read
f8fa1ac9-a44f-4fc1-921e-f1a0cc29fff6
உத்தரப்பிரதேசத்தில் செயல்படும் சிறார் காப்பகத்தில் நிகழ்ந்த கொடூரங்களைக் காட்டும் காணொளி பெரும் பரபரப்பைக் கிளப்பி இருக்கிறது. - படம்: இந்திய ஊடகம் 

ஆக்ரா: இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் செயல்படும் சிறார் காப்பகத்தில் சிறுமிகள் கொடுமைப்படுத்தப்படும் சம்பவங்கள் நிகழ்ந்து இருப்பதாக ஒரு காணொளி மூலம் தெரியவந்து இருக்கிறது.

அந்தக் காப்பகத்தில் இருக்கும் ஒரு சிறுமியை அங்குள்ள பெண் அதிகாரி ஒருவர் படுக்கையில் தள்ளி காலணிகளால் அடிக்கிறார்.

அந்தச் சிறுமி உதவி இல்லாமல் சத்தம் போட்டு அழுவதைக் காணொளிப் படம் காட்டுகிறது.

ஆக்ராவில் உள்ள ராஜ்கியா பால் கிரா என்ற சிறார் விடுதியில் அந்தக் கொடுமைகள் அரங்கேறி இருக்கின்றன.

அங்குள்ள பொறுப்பு அதிகாரியான மாது ஒருவர் சிறுமிகளின் கை, கால்களை கட்டிப்போட்டு தாக்குவதும் தெரியவந்துள்ளது.

செப்டம்பர் 4ஆம் தேதி நிகழ்ந்ததாக கூறப்படும் இந்தக் கொடுமை பற்றி அதிகாரிகள் முழு அளவில் புலன்விசாரணையைத் தொடங்கி இருக்கிறார்கள்.

குழந்தைகளைப் பராமரிக்கும் பொறுப்புகளில் உள்ள அரசு பராமரிப்பாளர்களே இத்தகைய கொடுமைகளில் ஈடுபட்டு இருப்பதால் இந்தப் பிரச்சினை பெரும் அதிர்ச்சியைக் கிளப்பிவிட்டு இருப்பதாக ஊடகங்கள் தெரிவித்தன.

அந்தக் காப்பகத்தின் பொறுப்பாளராக பூனம் பால் என்ற மாது இருக்கிறார் என்றும் அவர் தற்காலிகமாக பணியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருவாட்டி பூனம் பால் மீது வழக்கு தொடுக்கப்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த மாது பிரயாக்ராஜ் என்ற பகுதியில் செயல்பட்ட ஒரு சிறார் காப்பகத்தில் பொறுப்பாளராக இருந்தார் என்றும் அப்போதும் இவர் இதேபோன்ற காரியங்களைச் செய்தார் என்றும் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்