நாக்பூர்: மகாராஷ்டிராவின் நாக்பூர் நகரில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் இடைவிடாமல் கொட்டிய மழையால் அந்நகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது.
பலத்த மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தாழ்வான பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. குடியிருப்புப் பகுதியிலும் வீடுகளுக்குள் இடுப்பளவு தண்ணீர் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளானார்கள்.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் அம்பஸாரி ஏரி நிரம்பி வழிகிறது. சில இடங்களில் மக்கள் சிக்கியுள்ளதாகவும் மீட்புப் பணிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் மாநிலத் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறினார்.
தேசியப் பேரிடர் மீட்புக் குழுவினரும் மாநில மீட்புப் பணியாளர்களும் 25 பேரை மீட்டுள்ளனர்.
நாக்பூர் விமான நிலையப் பகுதியில் சனிக்கிழமை அதிகாலை 5.30 மணி வரை 106 மி.மீ. மழை பெய்ததாக வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.
மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வார்தா, சந்திராபூர், பண்டாரா, கோண்டியா மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று அது முன்னுரைத்துள்ளது.