புதுடெல்லி: இந்தியாவில் செயல்பட்டு வந்த ஆப்கானிய தூதரகம் அக்டோபர் 1 முதல் தன்னுடைய நடவடிக்கைகளை முடித்துக் கொள்வதாக அறிவித்து உள்ளது.
இதற்காக தான் வருந்துவதாகவும் அது அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
இந்திய அரசாங்கம் போதிய ஆதரவு தரவில்லை என்பதே இதற்கான காரணம் என்றும் அது குறிப்பிட்டது.
எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்த பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் வரலாற்று முக்கிய உறவுகள் இருந்து வருகின்றன.
நீண்டகாலப் பங்காளித்துவ உறவும் இருக்கிறது. இவற்றையும் கருத்தில்கொண்டு தான் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என்று அறிக்கை தெரிவித்தது.
இந்திய அரசாங்கம் போதிய ஆதரவை அளிக்கவில்லை. அதனால் தன்னுடைய கடமைகளை செம்மையாக நிறைவேற்ற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.
ஆப்கானிய மக்களின் நலன்களை நிறைவேற்றுவதில் தூதரகம் தோல்வியடைந்துவிட்டது. இவைதான் மூடப்படுவதற்கான முக்கிய காரணம் என்று அறிக்கையில் தூதரகம் குறிப்பிட்டது.