இந்தியாவின் குஜராத் மாநிலம், ஜுனாகத் நகரில் அரபிக்கடலோரத்தில் ஆசிய சிங்கம் ஒன்று நிற்பதைக் காட்டும் புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவலாகியது.
தேதி குறிப்பிடப்படாத அந்தப் படத்தில், அரபிக்கடலோரத்தில் சிங்கம் சாவகாசமாக நிற்பது தெரிந்தது. கடல் அலைகள் வீசும் ரம்மியமான காட்சியை சிங்கம் ரசிப்பதுபோல தெரிந்தது.
இந்திய வனத்துறை சேவை அதிகாரி பர்வீன் கஸ்வன் பகிர்ந்த அப்படத்தில், “நார்னியாவின் உண்மையான காட்சி. குஜராத் கரையோரத்தில் அரபிக்கடலில் அலைகளை சிங்கம் ரசிக்கும் அற்புதக் காட்சி,” என்று பதிவிட்டார்.
அவர் வெளியிட்ட மற்றொரு பதிவில், ஆசிய சிங்கங்கள் குறித்த ஆய்வுக் கட்டுரையைப் பகிர்ந்தார்.
“ஆசிய சிங்கங்கள் குறித்து தெரிந்துகொள்ள விரும்புவோர் இக்கட்டுரையை வாசிக்கலாம்,” என்றார் அவர்.
குஜராத்தின் கிர் தேசியப் பூங்காவில் உள்ள ஆசிய சிங்கங்கள், அந்த மாநிலத்தின் கடலோரப் பகுதிகளிலும் முன்பைவிட இப்போது அதிகமாகக் காணப்படுவதை ஆய்வு சுட்டியது.
இந்த சிங்கத்தின் படத்தைக் கண்டு விலங்குப் பிரியர்கள் ஆர்வமடைந்தனர்.
“அற்புதம்! நார்னியாவில் இயற்கையின் மந்திரம். குஜராத்தின் கரையோரத்தில் சாந்தமாக நிற்கும் காட்டரசன்,” என்று இணையவாசி ஒருவர் பதிவிட்டார்.
மத்தியப் பிரதேசத்தின் குனோ தேசிய வனவிலங்கு பூங்காவுக்கு இந்தச் சிங்கங்களை இடமாற்றம் செய்வதற்கான அவசியம் குறித்து வேறொருவர் வலியுறுத்தினார்.
சிங்கத்திற்கு இரையாவதற்குப் பதிலாக மற்ற விலங்குகளையும் பாதுகாக்கவும் எஞ்சியுள்ள காட்டரசன்களைக் காக்கவும் இந்த நடவடிக்கை முக்கியம் என்று அவர் விளக்கினார்.