புதுடெல்லி: இந்தியாவில் இருக்கும் கனடா நாட்டுத் தூதரக அதிகாரிகள் 41 பேரையும் அக்டோபர் 10ஆம் தேதிக்குள் திரும்பப்பெற வேண்டும் என்று கனடாவை இந்தியா கேட்டுக் கொண்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை ஃபைனான்சியல் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இதையடுத்து இரு நாடுகளுக்கான உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஜூன் 18ஆம் தேதி கனடாவைச் சேர்ந்த சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் கனடாவில் உள்ள சீக்கிய குருத்வாராவுக்கு அருகே சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலையில் இந்திய அரசுக்குத் தொடர்பு இருப்பதாக அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியிருந்தார். அத்துடன் கனடாவுக்கான இந்தியத் தூதரை நாட்டில் இருந்து வெளியேறுவதற்கு உத்தரவிட்டார்.
இதற்கு எதிர்வினையாக இந்தியாவும், கனடா நாட்டுத் தூதரக அதிகாரியை வெளியேற உத்தரவிட்டது.
இந்த நிலையில், அக்.10 க்குள் இந்தியாவில் இருக்கும் கனேடிய அதிகாரிகளை திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும், அதற்கு பின்னர் இந்தியாவில் இருக்கும் அவர்களின் தூதரகப் பொறுப்புகள் நீக்கப்படும் என்று இந்தியா கூறியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து இரு நாட்டு வெளியுறவு அமைச்சுகளும் எவ்விதக் கருத்துகளையும் தெரிவிக்கவில்லை.
முன்னதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், “கனடாவில் இந்திய தூதர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை நிலவியது. கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகளின் இருப்பு இந்தியாவை விரக்தியடையச் செய்துள்ளது,” என்று தெரிவித்திருந்தார்.