புதுடெல்லி: இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தில் மேக வெடிப்பு, கடும் மழை காரணமாக பெரும் வெள்ளம் ஏற்பட்டது. குறைந்தபட்சம் 40 பேர் கொல்லப்பட்டனர். ஏறக்குறைய 100 பேரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 23 ராணுவ வீரர்களும் மாண்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
சிக்கிம் மாநிலத்தில் கடந்த 50 ஆண்டுகளில் படுமோசமான ஒரு பேரிடர் என்று அது வர்ணிக்கப்படுகிறது. திடீர் பேய்மழை காரணமாக அங்குள்ள லோனாக் என்ற ஏரி உடைத்துக் கொண்டதே வெள்ளப் பேரிடருக்குக் காரணமாகிவிட்டது.
இந்நிலையில், அந்த ஏரியில் உடைப்பு ஏற்பட்டால் அது பற்றி முன்னதாகவே எச்சரிக்கும் பாதுகாப்பு முறையை லோனாக் ஏரியில் அதிகாரிகள் அமைத்துவந்த ஒரு நேரத்தில் பேரிடர் நிகழ்ந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
அறிவியல் வல்லுநர்களும் அரசாங்க அதிகாரிகளும் முன்னெச்சரிக்கை சாதன முறையை அமைத்துக்கொண்டு இருந்தனர். அந்த முன்னச்சரிக்கை முறையின் ஒரு பகுதியாக கண்காணிப்புப் படச்சாதனமும் பருவநிலை கணிப்புக் கருவிகளும் சென்ற மாதம் பொருத்தப்பட்டதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூறினர் என்று ராய்ட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்தது.
அந்த முன்னெச்சரிக்கை முறை முற்றிலும் செயல்பட்டு இருந்தால் நிலைமை இந்த அளவுக்கு மோசமாக இருந்திருக்காது என்று அவர்கள் கூறினர்.
லோனாக் ஏரியில் பொருத்தப்படவிருந்த முன்னெச்சரிக்கை பாதுகாப்பு முறை பற்றி முன்பு எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
அந்தப் பாதுகாப்புத் திட்டத்தில் ஈடுபட்டு இருந்த ஜூரிச் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த புவியியல் வல்லுநர் சைமன் ஆலன் என்பவர் இது பற்றி கருத்து கூறினார்.
‘‘எங்களுடைய குழு அந்த ஏரியில் முன்னெச்சரிக்கைக் கருவிகளைப் பொருத்த முயற்சிகளை மேற்கொண்டு இருந்தது. ஆனால், பணி தொடங்கிய இரண்டே வாரங்களில் பேரிடர் நிகழ்ந்துவிட்டது,’’ என்று அவர் கூறினார்.
இதற்கிடையே, ‘‘அந்த முன்னெச்சரிக்கைப் பாதுகாப்பு முறை இரண்டு கட்டமாகப் பொருத்தப்படுகிறது.
‘‘அதை இந்த ஆண்டிலேயே செய்து முடிக்க இந்திய அரசாங்கம் ஆயத்தமாக இல்லை. அந்த முறையின் துல்லியமான வடிவமைப்பு இன்னமும் உருவாக்கப்பட்டுவருகிறது,’’ என்று அந்தத் திட்டத்துடன் நேரடியாக தொடர்பு கொண்டு இருக்கும் இந்திய அதிகாரி ஒருவர் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
இவ்வேளையில், சிக்கிமில் சீரற்ற வானிலை தொடர்ந்து நிலவி வருவதால் கல்வி நிலையங்கள் அனைத்தும் அக்டோபர் 15 வரை மூடப்படுவதாக அந்த மாநிலத்தின் கல்வித்துறை அறிவித்து இருக்கிறது.
ஏராளமானோரைக் காணவில்லை என்பதால் சிக்கிம் பேரிடரில் சிக்கி மேலும் பலர் மாண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. தேடி மீட்புப் பணி தொடர்கிறது. பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
தேசிய பேரிடர் மேலாண்மைப் படையினரும் எல்லை சாலை அமைப்புப் படையினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில், மாநில மக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்று சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங் கோரிக்கை விடுத்து இருக்கிறார்.