புதுடெல்லி: மனிதர்களை விண்ணுக்கு ஏற்றிச்செல்லும் ககன்யான் விண்கலத்தின் படத்தை முதல்முறையாக இன்று (அக். 7) காலை வெளியிட்டுள்ளது இந்திய விண்வெளி ஆய்வு நிலையம் (இஸ்ரோ).
2024ஆம் ஆண்டு டிசம்பரில் இவ்விண்கலம் மனிதர்களை விண்வெளிக்கு ஏற்றிச்செல்லும்.
விரைவில் ஆளில்லாமல் அது சோதனைப் பயணத்தை மேற்கொள்ளும் என்கிறது இஸ்ரோ.
ககன்யான் திட்டம், மனிதர்களை விண்வெளிக்கு ஏற்றிச்செல்லும் இந்தியாவின் விண்வெளித் திறன்களை உலகிற்கு எடுத்துரைக்கும்.
இரண்டு அல்லது மூன்று பேர் அடங்கிய குழுவுடன் பூமியிலிருந்து ஏறக்குறைய 400 கிலோமீட்டர் தொலைவுள்ள சுற்றுப்பாதையில், ஒரு நாள் முதல் மூன்று நாள் வரையிலான பயணமாக அது அமையும்.
பயணம் நிறைவடைந்ததும் அவர்கள் பாதுகாப்பாக இந்தியாவின் கடற்பகுதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வந்திறங்குவர்.