புதுடெல்லி: உலகின் ஐந்தாவது ஆகப் பெரிய பொருளியலாகத் தற்போது திகழும் இந்தியா, விரைவில் அப்பட்டியலில் மூன்றாம் நிலையை எட்டுமென முன்னுரைக்கப்பட்டுள்ளது.
ஆசிய அளவில் தற்போது அது, சீனா, ஜப்பான் ஆகியவற்றை அடுத்து மூன்றாவது நிலையில் உள்ளது.
2030ஆம் ஆண்டுக்குள் இந்தியா ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி ஆசியாவில் இரண்டாம் இடத்தையும் உலக அளவில் மூன்றாம் இடத்தையும் எட்டும்.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மதிப்பு 2030க்குள் 7.3 டிரில்லியன் அமெரிக்க டாலராக இருக்குமென்று ‘எஸ் அண்ட் பி குளோபல் மார்க்கெட் இன்டெலிஜென்ஸ்’ கருத்துரைத்துள்ளது.
கடந்த ஈராண்டுகளாக இந்தியப் பொருளியல் வேகமான வளர்ச்சி கண்ட நிலையில், 2023ஆம் ஆண்டிலும் நீடித்த நிலைத்தன்மையுடன் கூடிய வலுவான பொருளியல் வளர்ச்சி பதிவாகியிருக்கிறது.
2024 மார்ச் மாதத்துடன் நிறைவடையும் நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.2 விழுக்காடு முதல் 6.3 விழுக்காடு வரை வளர்ச்சி காணும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலாண்டில் அது 7.8 விழுக்காடு விரிவடைந்ததாக ‘எஸ் அண்ட் பி குளோபல்’ தெரிவித்தது.
கடந்த பத்தாண்டுகளில் வெளிநாட்டு முதலீடுகளை இந்தியா வெகு வேகமாக ஈர்த்து வருகிறது. நீண்டகால அடிப்படையில் இது, நாட்டின் பொருளியலுக்குச் சாதகமாக அமைந்துள்ளது.
2022ல் 3.5 டிரில்லியனாக உள்ள இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, 2030ல் ஜப்பானைவிட அதிகமாக, 7.3 டிரில்லியன் அமெரிக்க டாலராகப் பதிவாகும். அதன்மூலம் ஆசிய பசிபிக் வட்டாரத்தில் இரண்டாவது ஆகப் பெரிய பொருளியல் என்ற நிலையை இந்தியா எட்டும்.
தற்போதைய நிலவரப்படி, 25.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் அமெரிக்கா உலகின் ஆகப் பெரிய பொருளியலாக விளங்குகிறது. ஏறத்தாழ 18 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புமிக்க மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் சீனா இரண்டாம் நிலையில் உள்ளது.