காஸாவிலிருந்து தப்பிய இந்திய பெண் காஷ்மீர் திரும்ப விருப்பம்

காஸாவிலிருந்து தப்பிய இந்திய பெண் காஷ்மீர் திரும்ப விருப்பம்

1 mins read
5eecfca7-9c2b-4206-ae5c-2a878ed04ed7
லுப்னா நசீர் ஷாபூவும் அவரது மகள் கரிமாவும் காஷ்மீர் திரும்பக் காத்திருக்கின்றனர். - படம்: தமிழ்நாடு ஊடகம்

காஸா: இஸ்ரேலியப் படைகளின் தாக்குதலில் சிக்கியிருக்கும் காஸாவிலிருந்து காஷ்மீரைச் சேர்ந்த லுப்னா நசீர் ஷாபூ என்ற பெண்ணும் அவரது மகள் கரிமாவும் ஒரு வழியாகத் தப்பி வெளியேறியிருக்கின்றனர்.

போர் உச்சக்கட்டத்தை நெருங்கிவருவதால் தங்களை மீட்குமாறு மத்திய அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி இஸ்ரேல் மற்றும் எகிப்தின் கெய்ரோவில் உள்ள இந்திய தூதரகங்கள் மூலம் அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதையடுத்து, இருவரும் இம்மாதம் 13ஆம் தேதி காஸா எல்லையைக் கடந்து எகிப்தின் கெய்ரோ நகரை வந்தடைந்தனர்.

தற்போது அங்கிருந்து காஷ்மீர் திரும்ப விரும்புவதாக லுப்னா கூறியுள்ளார்.

பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், “காஸாவில் இருந்து ரஃபா எல்லை வழியாக பத்திரமாக வந்தோம். தற்போது காஷ்மீர் திரும்புவதற்காகக் காத்திருக்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.

“காஸாவில் நிலைமை மோசமாகியுள்ளது. எங்களிடம் தண்ணீர், மின்சாரம் அல்லது இணைய வசதி எதுவும் இல்லை. தொலைத்தொடர்பு வசதி மிகவும் மோசமாக உள்ளது. நாங்கள் அங்கு மிகவும் மோசமான நிலையில் இருந்தோம். நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது. தினம் தினம் செத்து மடிவோரும் உண்டு, காயம் அடைவோரும் உண்டு, இடிபாடுகளுக்கு அடியில் கிடப்பவர்களும் உண்டு,” என்று அவர் காஸா நிலவரத்தைப் பதற்றத்துடன் கூறினார்.

தன்னை மீட்ட மத்திய அரசுக்கும் இந்திய தூதரகங்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்