டெஹ்ராடூன்: உத்தராகண்ட் சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் சிக்கிக் கொண்ட 41 தொழிலாளர்களை மீட்கும் பணிகள் கடந்த எட்டு நாள்களாக நடந்து வருகிறது. அந்தப் பணியை மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி மற்றும் அந்த மாநில முதல்வர் புஷ்கர் சிங்கர் தாமி ஆகியோர் பார்வையிட்டனர்.
உத்தரகாசியில் பிரம்மகால் - யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா, தண்டல்கான் பகுதிகளுக்கு இடையே சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் நவம்பர் 12ஆம் தேதி அந்தச் சுரங்கப் பாதையில் மண் சரிந்து விபத்து ஏற்பட்டது. அதில் அப்பாதையின் நடுவில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.
அவா்களை மீட்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகளின் பேரிடா் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
மீட்பு பணிகள் குறித்துப் பேசிய உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, “ஒவ்வொருவரின் உயிரையும் காப்பதே எங்களின் முன்னுள்ள முக்கிய பணியாகும். மீட்பு படைகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மாநில அரசு தயாராக உள்ளது என்று கூறினார்.
இதுகுறித்து உத்தரகாசி மாவட்ட அதிகாரி ஒருவர், “நாங்கள் கிடைமட்டமாக துளையிட்டு அவர்களை மீட்க முயற்சித்தோம்.
“இப்போது செங்குத்தாக துளையிடுவதற்கு முடிவு செய்துள்ளோம். சுரங்கப்பாதைக்கு மேலே ஒரு இடம் அடையாளம் காணப்பட்டு குறித்து வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து செங்குத்தாக சுமார் 300 - 350 அடி துளையிட்டு மீட்க உள்ளோம்,” என்று தெரிவித்தார்.