புதுடெல்லி: டெல்லியை சேர்ந்த 45 வயதான வாலிபர் ஒருவர், மனைவி தனது காதைக் கடித்து துண்டித்து துப்பியதாக டெல்லி காவல்துறையில் பரபரப்பான புகார் ஒன்றை கொடுத்துள்ளார்.
அந்தப் புகாரில், “நான் சுல்தான்புரியில் வசித்து வருகிறேன். கடந்த 20ஆம் தேதி காலையில் நான் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது எனது மனைவி என்னுடன் எந்த காரணமும் இல்லாமல் சண்டை போட்டார்.
அப்போது அவர், “உங்களுடன் சேர்ந்து வாழ்க்கை நடத்த எனக்கு விருப்பமில்லை. எனது குழந்தையுடன் தனியாக வசிக்க வேண்டும். எனவே, வீட்டை விற்று அதில் ஒரு பங்குப் பணத்தைக் எனக்குக் கொடுத்துவிடுங்கள்,” என்று கேட்டார்.
அதற்கு நான் சம்மதம் தெரிவிக்காமல் அவரை சமாதானப் படுத்தினேன். அப்போது ஒருவருக்கொருவர் திட்டிக்கொண்டோம். அதையடுத்து திடீரென என்னை அடிக்க கை ஓங்கினார். அதனால் நான் அவரைப் பிடித்துக் கீழே தள்ளிவிட்டு, தப்பி ஓட முயன்றேன்.
நான் தப்பித்துச் செல்ல முடியாதபடி என் மனைவி என்னைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். பின்னர் திடீரென எனது வலது காதை வேகமாகக் கடித்தார்.
நான் வலியால் அலறித் துடித்தேன். அப்போதும் அவர் விடவில்லை. என்னை நகரமுடியாமல் பிடித்துக்கொண்டு காதின் மேற்பகுதியை இன்னும் அழுத்தமாகக் கடித்துத் தனியாகத் துண்டித்து கீழே துப்பினார். பின்னர் இதையறிந்த எனது மகள் என்னை மருத்துவமனையில் சேர்த்தார்,” என்று அவர் தனது புகாரில் கூறியிருந்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறை, அந்தப் பெண்ணின் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றது.

