சில்க்யாரா: இந்தியாவின் உத்தராகண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 ஊழியர்களையும் மீட்புப் பணியாளர்கள் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி செவ்வாய்க்கிழமை இரவு வெளியிட்ட அறிக்கையில், “சில்க்யாரா சுரங்கத்திலிருந்து 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டு இருப்பது குறித்து எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
“பல அமைப்புகளும் சேர்ந்து மேற்கொண்ட நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட முயற்சி இது. அண்மைய ஆண்டுகளில் முக்கியத்துவம் மிகுந்த மீட்பு நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று,” என்று கூறினார்.
மீட்புப் பணியாளர்கள் சுரங்கத்தில் இருந்த இடிபாடுகளை உடைக்கத் தொடங்கிய ஆறு மணி நேரத்திற்குள் தொழிலாளர்கள் வெளியேற்றப்பட்டனர்.
90 செ.மீ. அகல எஃகு குழாய் வழியாக சக்கர தூக்குப் படுக்கைகளில் தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். மீட்புப் பணி ஒரு மணி நேரத்தில் நிறைவுசெய்யப்பட்டது.
ஏறக்குறைய 30 கி.மீ. தூரத்தில் உள்ள மருத்துவமனைக்கு தொழிலாளர்களைக் கொண்டுசெல்ல, சுரங்கத்தின் நுழைவாயிலில் மருத்துவ வாகனங்கள் வரிசையாக நின்றன.
சுரங்கத்திற்கு வெளியே காத்திருந்த உள்ளூர்வாசிகள், தொழிலாளர்கள் மீட்கப்பட்டபோது பட்டாசு வெடித்து, இனிப்புகளைப் பரிமாறி, ‘தாய் இந்தியா!’ என்று முழக்கமிட்டனர்.