புதுடெல்லி: புதிய செயற்கைக்கோள் ஒன்றை விண்ணுக்குள் இணைந்து பாய்ச்ச இந்தியாவும் அமெரிக்காவும் திட்டமிட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக இந்தியாவின் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சரான ஜித்தேந்திர சிங், நாசாவின் நிர்வாகி பில் நெல்சன் இருவரும் செவ்வாய்க்கிழமையன்று சந்தித்துப் பேசினர்.
இந்தச் செயற்கைக்கோளுக்கு ‘நாசா-இஸ்ரோ சிந்தெடிக் அப்பெச்சர் ரேடார்’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு இந்தச் செயற்கைக் கோள் விண்ணில் ஏவப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோளுக்கான ஜிஎஸ்எல்வி விண்கலம் தற்போது இஸ்ரோவால் உருவாக்கப்பட்டு வருகிறது.
இந்தச் செயற்கைக்கோள் மூலம் நிலநடுக்கம் போன்ற பேரிடர்களால் நிலத்தில் ஏற்படும் மாற்றங்கள், மலை மற்றும் துருவப்பகுதிகள், கடற்கரைப் பகுதிகள் தொடர்பான தகவல்கள் பெறப்படும் என டாக்டர் சிங் தெரிவித்துள்ளார்.
இந்தக் கூட்டுத் திட்டத்தின் மூலம் இந்திய விண்வெளி வீரர் ஒருவர் அனைத்துலக விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் ஷர்மாவை பில் நெல்சன் புதன்கிழமையன்று மும்பையில் சந்திக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

