உத்தராகண்ட்: ஹரித்துவார் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் கடந்த புதன்கிழமை (டிச. 27) அத்துமீறி நுழைந்தது ஒரு யானை.
நுழைவாயிலை உடைத்து அது உள்ளே நுழைந்தபோது அங்கு கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டன.
ராஜாஜி புலிகள் பாதுகாப்பிடத்திலிருந்து அந்த யானை தப்பியதாகக் கூறப்பட்டது. முதலில் ரோஷ்னாபாத்திலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தினுள் நுழைந்த அந்த யானை பின்னர் அங்கிருந்து மாவட்ட நீதிமன்றத்தை நோக்கி நகர்ந்தது.
சமூக ஊடகங்களில் அச்சம்பவத்தைக் காட்டும் காணொளி பரவி வருகிறது. ஆடவர்கள் சிலர் சத்தமிட்டு யானையை விரட்டுவது அதில் தெரிகிறது.
ஹரித்துவாரில் காட்டு யானைகள் மனிதர்கள் வாழும் பகுதிகளுக்குள் நுழையும் சம்பவங்கள் அண்மையில் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
சென்ற மாதம் இத்தகைய 35 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
யானைகள் இவ்வாறு தப்பித்துச் செல்வதைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக ராஜாஜி புலிகள் பாதுகாப்பிட நிர்வாகம் தெரிவித்துள்ளது.