விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது 2024ன் முதல் செயற்கைக்கோள்

விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது 2024ன் முதல் செயற்கைக்கோள்

2 mins read
e203d3c1-8a47-41be-b100-bf80a67186e9
பிஎஸ்எல்வி-சி58 ராக்கெட் மூலம் ஜனவரி 1ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட எக்ஸ்போசாட் செயற்கைக்கோள். - படம்: ஏஎஃப்பி

ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தின் (இஸ்ரோ) ‘எக்ஸ்போசாட்’ செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டு வெற்றிகரமாக அதன் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

அறிவியல் பூர்வமான ஆய்வுகளை மேலும் ஆழமாக மேற்கொள்ளும் வகையில் 2024ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் அனுப்பப்பட்ட முதல் செயற்கைக் கோள் இது எனக் கூறப்படுகிறது.

இதனை இஸ்ரோ அமைப்பின் தலைவர் சோம்நாத் திங்கட்கிழமை அறிவித்தார்.

இதன் மூலம் நியூட்ரான் பற்றி ஆராயும் பிரத்தியேக செயற்கைக்கோளை கொண்ட அமெரிக்காவுக்கு அடுத்த 2வது நாடு என்ற நிலையை இந்தியா பெற்றுள்ளது.

விண்வெளியில் உள்ள புற ஊதாக்கதிர்கள், அங்கு பரவும் எக்ஸ்ரே கதிர்கள் இயக்கம் மற்றும் நட்சத்திரங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்வதற்காக கடந்த 2015ஆம் ஆண்டு ‘அஸ்ட்ரோசாட்’ என்னும் செயற்கைக்கோள் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், நியூட்ரான் நட்சத்திரங்கள் மற்றும் கருந்துளை உள்ளிட்ட வானியல் நிகழ்வுகளை ஆழமான ஆய்வு மேற்கொள்ள உதவும் வகையில் ‘எக்ஸ்போசாட்’ எனும் அதிநவீன செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்தது.

ஐந்தாண்டு ஆயுட்காலத்தைக் கொண்டுள்ள ‘எக்ஸ்போசாட்’ செயற்கைக்கோளின் எடை 469 கிலோ கிராம் ஆகும். பூமியில் இருந்து சுமார் 650 கி.மீ உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அந்த செயற்கைக்கோள் மூலம் விண்வெளி பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

‘எக்ஸ்போசாட்’ செயற்கைக்கோள் பிஎஸ்எல்வி சி-58 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து புத்தாண்டு தினமான (ஜனவரி 1) காலை 9.10 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. ஒவ்வொரு படிநிலையாக ராக்கெட்டை விண்ணில் நிலைநிறுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு அது வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

விண்வெளியில் பரவும் எக்ஸ் கதிர்களின் துருவ முனைப்பு அளவு மற்றும் கோணத்தை அளவிடுதல், நியூட்ரான் நட்சத்திரத்தில் இருந்து வெளிப்படும் கதிரியக்கம், கருந்துளை வாயுக்களின் நெபுலா உட்பட பல்வேறு அம்சங்களை ‘எக்ஸ்போசாட்’ ஆய்வு செய்ய உதவும்.

எக்ஸ்போசாட் செயற்கைக்கோள் உதவியால் மேற்கொள்ளப்படவிருக்கும் ஆய்வுகள் உலகளாவிய விண்ணியல் ஆய்வில் கணிசமாக பங்களிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நியூட்ரான் நட்சத்திரங்கள், கருந்துளை உள்ளிட்ட பலவற்றைப் பற்றிய புரிதலை மேம்படுத்த உதவும் என்றும் நம்பப்படுகிறது.

ககன்யான் தயார் நிலைக்கான ஆண்டாக 2024 இருக்கப் போகிறது. 2025ஆம் ஆண்டு ககன்யான் திட்டம் மூலம் மனிதர்களை விண்ணிற்கு அனுப்ப உள்ளோம். இந்த ஆண்டில் (2024) 12 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

ஆதித்யா எல்1 விண்கலம் வரும் 6-ம் தேதி எல்1 புள்ளியை எட்டும், அதன்பிறகு இறுதிகட்ட பணிகளை மேற்கொள்வோம் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறினார்.

குறிப்புச் சொற்கள்