பாட்னா: பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தில் 2 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
திங்கள்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்த தீ விபத்து ஏற்பட்டது. உயிரிழந்தவர்கள் நீரஜ் பாஸ்வான், அவரது மனைவி கவிதா தேவி (25) மற்றும் லாவ் (5), குஷ் (3) ஆகிய இரு மகன்கள். தேவி எட்டு மாத கர்ப்பிணியாக இருந்தார்.
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ விபத்து குறித்து நீரஸ் பாஸ்வானின் தந்தை ராம் குமார் பாஸ்வான் கூறுகையில், வீட்டிற்கு வெளியே உறங்கிக்கொண்டிருந்தேன். திடீரென பார்த்தபோது வீடு முழுவதும் எரிவதைக் கண்டேன். தீ மளமளவென அருகிலிருந்த குடிசைகளையும் பற்றி எரித்தது. தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. அக்கம்பக்கத்தினர் நால்வரின் உயிரையும் காப்பாற்ற முயன்றனர். எனது மருமகள் கர்ப்பமாக இருந்தார், அடுத்த மாதம் அவருக்கு பிரசவம் என்று கூறினார்.
விபத்தைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.