புதுடெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வியாழக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது.இந்தத் தீ விபத்து குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இவ்விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
இது குறித்து டெல்லி தீயணைப்புத்துறை இயக்குநர் அதுல் கார்க் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “வியாழக்கிழமை காலை 5 மணியளவில் எய்ம்ஸ் மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில் இருக்கக்கூடிய இயக்குநர் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. ஏழு தீயணைப்பு வாகனங்களில் சென்ற வீரர்கள் தீயை அணைத்தனர். அலுவலகத்தில் இருந்த கோப்புகள், மேசைகள், குளிர்சாதன பெட்டி உள்ளிட்டவை தீயில் எரிந்து நாசமாகின. இந்த விபத்தில் உயிரிழப்போ காயமோ ஏற்படவில்லை” என்று தெரிவித்தார்.
மேலும், இந்த விபத்து குறித்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.