பெங்களூரு: கர்நாடக மாநிலத்தின் மாண்டியா மாவட்டத்தில் உள்ள கெரகோடு கிராமத்தில் கடந்த வாரம் 108 அடி உயரத்தில் அனுமன் கொடியேற்றியது சர்ச்சையைக் கிளப்பியது.
தேசியக் கொடி ஏற்றுவதற்கான கொடிக்கம்பத்திற்கு கிராம பஞ்சாயத்து அனுமதி அளித்திருக்கிறது. ஆனால் தேசியக் கொடிக்குப் பதில் அனுமன் கொடி ஏற்றப்பட்டதால் ஏராளமானோர் புகார் தெரிவித்தனர்.
அதையடுத்து கிராம பஞ்சாயத்து நிர்வாக அதிகாரிகள் அக்கொடியை அகற்றுவதற்கு அங்கு சென்றனர். அப்போது அங்கு பாஜகவினர் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின்போது காங்கிரஸ் எம்எல்ஏ ரவி குமாரின் பதாகைகள் சேதப்படுத்தப்பட்டன. இதனால் பதற்றம் உருவானது. இதையடுத்து அங்கு ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.
நிலைமை மோசமடைந்ததால் காவல்துறை அதிகாரிகள் தடியடி நடத்தி, கூட்டத்தை கலைத்தனர். பின்னர் அங்கு தேசியக் கொடிக்குப் பதிலாக ஏற்றப்பட்டிருந்த அனுமன் கொடியை அகற்றிவிட்டு தேசியக்கொடியை ஏற்றினர்.
தேசியக் கொடி நிறுவப்பட வேண்டிய இடத்தில் ஏற்றப்பட்ட அனுமன் கொடி அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவின் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடத்த பாஜக மற்றும் இந்து அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.
பெங்களூரில் உள்ள மைசூரு வங்கி சதுக்கத்தில் பெரிய அளவில் போராட்டம் நடத்த பாஜக முடிவு செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடகாவில் அனுமன் கொடி அகற்றப்பட்டு தேசியக் கொடி ஏற்றப்பட்டதைக் கண்டித்து கர்நாடக பாஜகவினர் 14 கிலோமீட்டர் நடைப்பயணத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். அதற்கு மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆதரவு அளிக்கப் போவதாக அறிவித்துள்ளது.
கொடிக்கம்பம் உள்ள இடம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட இடம். அங்கு குடியரசு நாளில் தேசியக்கொடி ஏற்றுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் அங்கு அனுமன் கொடி ஏற்றப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் அரசியல் இருக்கலாம் என்று மாண்டியா மாவட்ட பொறுப்பு அமைச்சர் செலுவரயாசுவாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்துத் தெரிவித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, “பாஜகவினர் தேவையற்ற பிரச்சினைகளைக் கிளப்பிக் கொண்டுள்ளனர். அவர்கள் தேசியக்கொடி மற்றும் கன்னடக் கொடி ஆகியவற்றை ஏற்றுவதற்கான அனுமதியையே பெற்றிருந்தனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் வரவிருக்கிறது. அதையடுத்து பாஜகவினர் இந்தக் கொடிச் சம்பவத்தை எப்படி அரசியலாக்குவது என்று பார்க்கிறார்கள். அதனால் அவர்கள் இந்தப் பிரச்சினையைக் கையில் கொடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நானும் ஒரு இந்துதான், எனது மக்கள் மீது நான் அன்பு செலுத்துகிறேன். அதேவேளையில். சக மனிதர்களுடன் ஒத்து வாழ்தலிலும், சகிப்புத் தன்மையிலும் நம்பிக்கை கொண்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.