புதுடெல்லி: காவிரி நதிநீர் பங்கீட்டில் உள்ள பிரச்சினைகளைக் களைவதற்காக உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த ஆணையம் அமைக்கப்பட்டதில் இருந்து இதுவரை 27 கூட்டங்கள் நடந்துள்ளன. இந்த நிலையில் 28வது கூட்டம் பிப்ரவரி 1ஆம் தேதி டெல்லியில் நடக்கிறது. இந்தக் கூட்டம் 3 மாதங்களுக்குப் பிறகு நடைபெற உள்ளது.
ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். கூட்டத்துக்கான அழைப்பு அவர்களுக்கு விடுக்கப்பட்டு உள்ளது.
கடைசியாக காவிரி மேலாண்மை கூட்டம் கடந்த நவம்பர் 3ஆம் தேதி நடைபெற்றது. இதன்பிறகு மூன்று மாதங்களாக இந்தக் கூட்டம் நடைபெறவில்லை. காவிரியில் இருந்து கர்நாடகம் எவ்வளவு நீர் திறந்துவிட வேண்டும் என்பதை ஆணையத்துக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரைத்து வருகிறது. இதையடுத்து, கடந்த 18ஆம் தேதி நடந்த காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில், ஜனவரி, பிப்ரவரி மாதத்திற்கு 5.26 டி.எம்.சி தண்ணீர் திறக்க பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.