ஹைதராபாத்: தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவ், வியாழக்கிழமை சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.
தெலுங்கானாவில் கடந்த ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது.
அதில் சந்திரசேகர ராவ் தலைமையில் தொடர்ந்து 2 முறை ஆட்சி செய்த பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) கட்சி ஆட்சியை இழந்தது. தெலுங்கானாவில் முதல்முறையாக காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. அக்கட்சியை சேர்ந்த ரேவந்த் ரெட்டி முதல்வராகப் பதவியேற்றார்.
இதற்கிடையில், டிசம்பர் 3ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நாளில் சந்திரசேகர ராவ் தனது பண்ணை வீட்டில் தவறி விழுந்தார். இதில் அவருக்கு இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதற்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்ட சந்திரசேகரா ராவ், பிறகு மருத்துவமனையிலிருந்து வெளியாகி, வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். கஜ்வேல் தொகுதியில் அவர் வெற்றி பெற்றாலும் எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை.
இந்நிலையில், தெலுங்கானா சட்டப்பேரவை சபாநாயகர் கட்டம் பிரசாத் குமாரின் அலுவலகத்தில் சந்திரசேகர ராவ் வியாழக்கிழமை சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார்.