புதுடெல்லி: உத்தராகண்ட் மாநிலம் ஹல்துவானி நகரின் வன்புல்புரா பகுதியில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. இதில் கடந்த வியாழக்கிழமை மதரஸா, மசூதி இடிக்கப்பட்டதற்கு எதிராக வன்முறை ஏற்பட்டது.
இதில் 6 பேர் உயிரிழந்தனர். சுமார் 300 பேர் காயம் அடைந்தனர்.
கலவரம் தொடர்பாக சுமார் 5,000 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் இதுவரை 18 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
நைனிடால் முழுவதிலும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு சனிக்கிழமை தளர்த்தப்பட்டது. வன்புல்புராவில் மட்டுமே 144 தடை ஊரடங்கு உத்தரவு நீடிக்கிறது.
வன்முறை குறித்து குமாவ் பகுதி பிராந்திய ஆணையர் தலைமையில் நீதி விசாரணை நடத்த முதல்வர் புஷ்கர்சிங் தாமி அரசு உத்தரவிட்டுள்ளது. விசாரணை அறிக்கையை 15 நாள்களுக்குள் அளிக்கவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.
கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டதா என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வன்முறையின்போது காவல் துறையினருடன் செய்தியாளர்களும் தாக்கப்பட்டனர்.
கலவரத்திற்கு காரணமான ஒருவரையும் விடாமல் கைது செய்ய இருப்பதாக முதல்வர் தாமி அறிவித்துள்ளார். எதிர்காலத்தில் கலவரத்தில் ஈடுபட அஞ்சும் வகையில் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
கலவரம் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை முற்றிலும் அங்கு முடங்கியுள்ளது. ஹல்துவானி ரயில் நிலையமும் பாதுகாப்பு கருதி மூடப்பட்டுள்ளது.