புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியின் இந்திரா காந்தி விமான நிலையத்தில் தரையிறங்கும்போது இண்டிகோ விமானம் ஒன்று நிர்ணயிக்கப்பட்ட வருகை பாதையில் (எக்சிட்வே) செல்லத் தவறியது.
இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (11 பிப்ரவரி) காலை நிகழ்ந்தது. சம்பவத்தைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட விமானம் ஓடுபாதையில் நின்றது. வேறு வாகனத்தைக் கொண்டு (tow) அது விமான நிறுத்துமிடத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டது.
அதனால் பல நிமிடங்களுக்கு மற்ற விமானங்கள் ஓடுபாதையில் போக முடியாமல் இருந்தது.
சுற்றுச்சூழல் மங்கலாக இருந்ததால் 6E 2221 என்ற எண்ணைக் கொண்ட இண்டிகோ விமானம் வருகை பாதையைத் தவறவிட்டதாக அந்நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். அவ்விமானம் அம்ரித்சார் நகரிலிருந்து புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொண்டதாகவும் அவர் சொன்னார்.
இதையடுத்து இண்டிகோ, பயணிகளிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது. உள்ளூர் நேரப்படி காலை 7.20 மணிக்கு அம்ரித்சாரிலிருந்து புறப்பட்ட விமானம் 8.35 மணிக்கு புதுடெல்லியில் தரையிறங்கியது.