ஸ்ரீநகர்: இந்தியாவில் புதுடெல்லியிலிருந்து ஸ்ரீநகருக்குச் சென்ற இண்டிகோ பயணிகள் விமானம் ஒன்று மோசமான பருவநிலையால் நடுவானில் ஆட்டங்கண்டது.
திங்கட்கிழமை (19 பிப்ரவரி) மாலை இச்சம்பவம் நிகழ்ந்தது. ஸ்ரீநகரில் பலத்த காற்று வீசியதால் 6E6125 என்ற பதிவு எண்ணைக் கொண்ட இந்த விமானம் ஆட்டங்கண்டது.
அப்போது விமானத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்ததைக் காட்டும் காணொளி சமூக ஊடகங்களில் அதிகமாகப் பகிரப்பட்டது.
விமானத்தில் இருந்த பயணி ஒருவர் இச்சம்பவத்தைக் காணொளியில் பதிவுசெய்தார்.
ஸ்ரீநகரில் பலத்த காற்று வீசியதால் இந்நிலை உருவானது. கடும் மழையாலும் பனிப்பொழிவாலும் பல விமானச் சேவைகள் தாமதமடைந்தன.
மோசமான பருவநிலையால் இந்த விமானம் பாதிக்கப்பட்டதாக இண்டிகோ நிறுவனம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
“டெல்லியிலிருந்து ஸ்ரீநகருக்குப் புறப்பட்ட 6E6125 என்ற எண்ணைக் கொண்ட விமானம் வழியில் மோசமான பருவநிலையை எதிர்கொண்டது. அதைக் கையாள்வதற்கான அனைத்து செயல்பாட்டு முறைகளையும் விமான ஊழியர்கள் கடைப்பிடித்தனர். விமானம் ஸ்ரீநகரில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. மோசமான பருவநிலையால் பயணிகளுக்கு ஏற்பட்ட அசெளகரியத்துக்கு நாங்கள் வருந்துகிறேம்,” என்றும் அந்த அறிக்கையில் இண்டிகோ குறிப்பிட்டது.