நிஜாமாபாத்: இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் கிட்டத்தட்ட 70 தெருநாய்கள் விஷ ஊசி போட்டுக் கொல்லப்பட்டதாக விலங்குநல அமைப்புகள் புகார் அளித்துள்ளன.
இம்மாதம் 16, 17ஆம் தேதிகளில் நிஜாமாபாத் மாவட்டம், அலுரு மண்டலத்திற்கு உட்பட்ட மச்செர்லா என்ற சிற்றூரில் அந்தக் கொடூரம் அரங்கேற்றப்பட்டதாக ‘ஸ்ட்ரே அனிமல் ஃபவுண்டேஷன் ஆஃப் இந்தியா’, ‘பிரீத் அனிமல் ரெஸ்க்யூ ஹோம்’ என்ற இரு அமைப்புகளும் குற்றம் சாட்டியுள்ளன.
இதன் தொடர்பில் காணொளி மற்றும் புகைப்படச் சான்றுகளுடன் காவல் நிலையத்தில் ‘பிரீத்’ அமைப்பின் சாய்ஸ்ரீ புகார் அளித்துள்ளார்.
மச்செர்லா ஊராட்சி மன்றத் தலைவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது நாய்கள் கொல்லப்பட்டதை அவர் ஒப்புக்கொண்டதாகவும் சாய்ஸ்ரீ கூறியிருக்கிறார்.
ஊராட்சி மன்ற ஊழியர்கள் இருவருடன் சேர்ந்து, அதன் தலைவரே இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டதாக ‘ ஸ்ட்ரே அனிமல் ஃபவுண்டேஷன் ஆஃப் இந்தியா’ அமைப்பைச் சேர்ந்த கௌதம் குறிப்பிட்டார்.
இதன் தொடர்பில் பெயரைக் குறிப்பிட விரும்பாத ஒருவர் தமக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார் என்றும் கொல்லப்பட்ட நாய்களில் ஒன்று வீட்டு நாய் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது என்றும் கௌதம் கூறினார்.
மாவட்ட கால்நடை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அலுவலரைத் தொடர்புகொண்டு புகார் அளிக்கப்பட்டது என்றும் பின்னர் சம்பந்தப்பட்ட ஊராட்சி அதிகாரிகளும் ஊழியர்களும் எச்சரிக்கப்பட்டு அந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டது என்றும் அவர் சொன்னார்.