புதுடெல்லி: இண்டிகோ விமானம் ஒன்றின் உணவுப் பகுதியில் கரப்பான்பூச்சிகளைக் காட்டும் காணொளி ஒன்றைப் பயணி ஒருவர் சமூக ஊடகத்தில் பகிர்ந்தார்.
அதைத் தொடர்ந்து இண்டிகோ நிறுவனம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
விமானங்களில் சுகாதாரத் தரநிலைகளை இண்டிகோ கட்டிக்காக்கும் விதம் குறித்து அந்தக் காணொளி மறுபடியும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, இண்டிகோ அதன் விமானங்கள் அனைத்தையும் முழுவதுமாக தூய்மை செய்துள்ளது.
“இண்டிகோவில் நாங்கள் உயர்தர சுகாதாரத்தைக் கட்டிக்காத்து வருகிறோம். பயணிகளுக்கு ஏற்படுத்தப்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம்,” என்று இண்டிகோ வெளியிட்ட செய்தி அறிக்கையில் தெரிவித்தது.
எனினும், பயனாளர்கள் அதை ஏற்றுக்கொள்வதாக இல்லை.
எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பயனாளர் ஒருவர், “இண்டிகோ தரப்பில் இது பொறுப்பற்ற பதிலாகும். இச்சம்பவம் குறித்து டிஜிசிஏ கவனம் கொள்ள வேண்டும். அந்த விமான நிறுவனத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.
இண்டிகோ தவறான காரணங்களுக்காக செய்தியில் இடம்பிடித்திருப்பது இது முதன்முறையன்று.