ஹரியானா: பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேச மாநில விவசாயிகள் தங்களது பல்வேறு கோரிக்கைகளையும் மத்திய அரசு நிறைவேற்றித் தரவேண்டும் என வலியுறுத்தி கடந்த 13ஆம் தேதி முதல் டெல்லி நோக்கி பேரணியாகச் சென்றனர்.
விவசாயிகள் போராட்டத்தில் காவலர்கள் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினர். இதில் 21 வயது விவசாயி ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து, தங்களது போராட்டத்தை பிப்ரவரி 29ஆம் தேதி வரை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளனர் விவசாயிகள்.
இந்நிலையில், அம்பாலா, குருசேத்ரா, கைதல், ஜிந்த், ஹிசார், ஃபதேஹாபாத், சிர்சா ஆகிய 7 மாவட்டங்களில் முடக்கப்பட்டிருந்த இணையச் சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்பாலா மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், “கடந்த சில நாள்களாக எங்கள் மாவட்டத்தில் இணையச் சேவை முடக்கப்பட்டிருந்தது. இதனால், வெளியுலகத் தொடர்பை இழந்திருந்தோம். பல்வேறு வேலைகள் முடங்கின. தற்போது இணையச் சேவை மீண்டும் வழங்கப்பட்டிருப்பது ஆறுதலாக உள்ளது,” என்று தெரிவித்தார்.