பெங்களூரு: இந்தியாவின் பெங்களூரு நகரில் உள்ள புகழ்பெற்ற உணவகத்தில் வெள்ளிக்கிழமை (மார்ச் 1) நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் ஒன்பது பேர் காயமடைந்தனர்.
கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.
‘ராமேசுவரம் கஃபே’ எனும் அந்தப் புகழ்பெற்ற உணவகம், குண்டலஹள்ளி வட்டாரத்தில் அமைந்துள்ளது.
பயங்கரவாத எதிர்ப்பு தேசியப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், காவல்துறையினர், வெடிகுண்டைச் செயலிழக்கச் செய்யும் வல்லுநர் குழு, தடயவியல் வல்லுநர்கள் எனப் பலரும் சம்பவ இடத்தில் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தாக்குதலில் வெடிபொருளை வெடிக்கச் செய்யும் கருவி பயன்படுத்தப்பட்டதை அதிகாரிகள் கண்டறிந்ததாக முதல்வர் கூறினார்.
“பிற்பகல் 12.30 மணியளவில் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்ததாக எனக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்தில் பை ஒன்று காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. விசாரணை தொடர்கிறது,” என்றார் அவர்.
காயமடைந்த ஒன்பது பேரும் புரூக்ஃபீல்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்றும் அவர்களில் யாரும் அபாயக் கட்டத்தில் இல்லை என்றும் காவல்துறை கூறியது.