ஜார்க்கண்ட்: இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்திற்குத் தன் கணவருடன் மோட்டார்வண்டி சுற்றுலா சென்ற ஸ்பெயின் நாட்டுப் பெண், ஒரு கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மோட்டார்வண்டியில் பல இடங்களுக்குச் சுற்றுப்பயணம் சென்ற தம்பதி, இரவு நேரமானபோது ஜார்க்கண்ட்டின் தும்கா மாவட்டத்தில் உள்ள ஹன்ஸ்திகா பகுதியில் தற்காலிகக் கூடாரம் ஒன்றை அமைத்துத் தங்கியிருந்தனர்.
அப்போது அப்பகுதியைச் சேர்ந்த இளையர் கூட்டம் தம்பதியைத் தாக்கினர்.
மார்ச் 1ஆம் தேதியன்று நடந்த இச்சம்பவத்தில் கணவரின் முன்னிலையில் அந்தப் பெண்ணை கும்பல் சீரழித்ததாகக் கூறப்படுகிறது.
அவ்வழியாக வந்த சுற்றுக்காவல்துறை அதிகாரிகள், காயங்கள் காரணமாக மருத்துவமனையில் அவர்களைச் சேர்த்தபோதுதான் அந்தப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்தது.
இதையடுத்து, தனிப்படை ஒன்றைக் காவல்துறையினர் அமைத்து அந்தக் கும்பலைத் தேடி வருகிறது.
மார்ச் 2ஆம் தேதியன்று சிக்கிய மூன்று பேரைக் காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.