புதுடெல்லி: எதிர்வரும் மார்ச் 10ஆம் தேதி நாடு தழுவிய அளவில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக விவசாயிகள் அமைப்பின் தலைவர் ஜக்ஜித் சிங் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லிக்குப் பேரணியாகச் செல்லும் முடிவில் இருந்து விவசாயிகள் ஒருபோதும் பின்வாங்க மாட்டார்கள் என்றார்.
நீண்ட காலமாக விவசாயிகள் வலியுறுத்தி வரும் கோரிக்கைகளை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை, ஓய்வூதியம், அரசுத் திட்டங்களுக்காக கையகப்படுத்தப்பட்ட விளைநிலங்களுக்கு அதிக இழப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் தரப்பு வலியுறுத்தி வருகிறது.
இதற்காக பல்வேறு மாநிலங்களில் விவசாய அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்நிலையில், அனைத்து விவசாயச் சங்கங்களையும் ஒருங்கிணைத்து விவசாயிகள் மீண்டும் பெரிய அளவில் போராட்டத்தைத் தொடங்கி உள்ளனர்.
கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி அன்று டெல்லியை நோக்கி விவசாயிகள் பேரணியாகச் செல்ல முற்பட்டனர். பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேச மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை நோக்கிப் பேரணியாகச் சென்றபோது தடுத்து நிறுத்தப்பட்டனர்.
பஞ்சாப் மாநில எல்லைப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தபோதும் பேரணி நீடித்தது. அப்போது விவசாயிகள் மீது கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசப்பட்டபோது பலர் காயமடைய நேரிட்டது. ஒரு விவசாயி உயிரிழந்தார்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள் அமைப்புத் தலைவர் ஜக்ஜித் சிங், மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும் என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மார்ச் 10ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
“டெல்லிக்குப் பேரணியாகச் செல்ல வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர். எல்லைப் பகுதிகளில் எங்களது வலிமையை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம்.
“மார்ச் 6ஆம் தேதி பல்வேறு மாநிலங்களில் இருந்து விவசாயிகள் ரயில், பேருந்து, விமானங்கள் மூலம் டெல்லி வந்தடைவார்கள்,” என்றார் ஜக்ஜித்சிங்.
மார்ச் 10ஆம் தேதி, மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று குறிப்பிட்ட அவர், எக்காரணத்தை முன்னிட்டும் இந்த அறிவிப்பில் மாற்றம் ஏற்படாது என்றார்.