குருகிராம்: ஹரியானா மாநிலத்தின் குருகிராம் பகுதியில் உள்ள ஓர் உணவகத்தில், சாப்பிட்ட 5 பேர் ரத்த வாந்தி எடுத்தனர். இதுதொடர்பாக அந்த உணவகத்தின் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
லஃபோஸ்டா கபே என்ற அந்த உணவு விடுதிக்கு அங்கித் குமார் என்பவர் தனது மனைவி மற்றும் நண்பர்களுடன் கடந்த சனிக்கிழமை சாப்பிடச் சென்றார். சாப்பிட்ட பிறகு அவர்களுக்கு மவுத் பிரஷ்னர் பாக்கெட்டுகள் கொடுக்கப்பட்டன. அதை அவர்கள் வாயில் போட்டதும் வாய் எரிச்சலில் தவித்தனர். உடனே அவர்கள் தண்ணீரால் வாயைக் கொப்பளித்தனர். அதன்பின் அவர்கள் ரத்த வாந்தி எடுத்தனர்.
இதைக்கண்டு அதிர்ந்த உணவு விடுதி ஊழியர்கள் அவர்களை உடனடியாக அருகேயுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்கள் மவுத் பிரஷ்னர் பாக்கெட்டை மருத்துவரிடம் காண்பித்தனர். உடனே அது மவுத்பிரஷ்னர் அல்ல, ‘டிரை ஐஸ்’ எனக்கூறியுள்ளார் மருத்துவர்.
இந்த டிரை ஐஸ் உறைந்த நிலையில் உள்ள கார்பன்டை ஆக்ஸைடு ஆகும். இது உருகி திரவ நிலையை அடையாமல் வாயுவாகமாறும் ஐஸ்கிரீம் போன்ற பொருள்களை உருகாமல் எடுத்துச் செல்வதற்குப் பயன்படுத்தக் கூடியது.
இது தண்ணீரில் கரைந்தால் கார்பானிக் அமிலமாக மாறிவிடும். இதை உட்கொண்டால் உடலில் ரத்தக் காயம் ஏற்பட்டு மூச்சுத் திணறலை ஏற்படுத்தும். சில நேரங்களில் உயிரிழப்புகூட நேரிடலாம் என்று மருத்துவர் எச்சரித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக உணவு விடுதி ஊழியர் மற்றும் உரிமையாளர் மீது குருகிராம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உணவு விடுதியின் மேலாளர் கைது செய்யப்பட்டார்.