கைகளை இழந்த ஓவியர் மீண்டும் தூரிகையை ஏந்த உதவிய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை

கைகளை இழந்த ஓவியர் மீண்டும் தூரிகையை ஏந்த உதவிய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை

1 mins read
c33c37fa-7483-4fbd-a8b9-8289a18aadc6
45 வயது ஆடவர், இழந்த தன் கைகளை உறுப்பு தானம்வழி மீண்டும் பெற முடிந்தது. - படம்: இணையம்

புதுடெல்லி: ஓர் ஓவியர் தன் படைப்புக்கு உயிர் கொடுக்க மிகவும் முக்கியமானவை, அவரின் கைகள்.

அவற்றை 2020ஆம் ஆண்டில் நடந்த கோர ரயில் விபத்து ஒன்றில் பறிகொடுத்தார் ஓவியராக வேலை பார்த்த 45 வயது ஆடவர் ஒருவர்.

இருப்பினும், அவர் மீண்டும் தூரிகையை ஏந்த, புதுடெல்லி மருத்துவர்களின் கரங்கள் கைகொடுத்துள்ளன.

வசதியற்ற அந்த ஆடவர், தன் தலையெழுத்தை இனி மாற்ற முடியாது என்று வெம்பிக் கொண்டிருந்தபோது மீனா மேத்தா என்ற பெண்ணுக்கு மூளைச்சாவு உறுதிசெய்யப்பட்டது.

தன் இறப்புக்குப்பின் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய ஏற்கெனவே விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், கையிழந்த ஓவியரையும் சேர்த்து மொத்தம் நால்வரின் வாழ்க்கையை உருமாற்றினார் மீனா மேத்தா.

பள்ளி ஒன்றின் முன்னாள் நிர்வாகத் தலைவராக இருந்த அந்தப் பெண்ணின் தயவில், கனவுகள் சிதைக்கப்பட்ட நிலையில் இருந்த ஓவியர் மீண்டும் கைகளைப் பெற்றார்.

அந்தப் பெண்ணின் சிறுநீரகம், கல்லீரல் மற்றும் விழி வெண்படலங்கள் மற்ற மூவரின் வாழ்க்கையை மாற்றின.

அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவக் குழுவுடன், புதிதாகப் பொருத்தப்பட்ட கைகளால் ‘தம்ஸ்-அப்’ காட்டும் ஓவியர்.
அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவக் குழுவுடன், புதிதாகப் பொருத்தப்பட்ட கைகளால் ‘தம்ஸ்-அப்’ காட்டும் ஓவியர். - படம்: இணையம்

இந்த இமாலயச் சாதனையை நிகழ்த்திய மருத்துவக் குழுவினர், ஓவியருக்குக் கைகளைப் பொருத்த 12 மணிநேரத்திற்கு மேலாக அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

கைகளை மீண்டும் பெற்ற அந்த ஓவியர், தன் இரு கட்டைவிரல்களால் ‘தம்ஸ் அப்’ காட்டிய படத்தைக் காணும்போது மருத்துவர்களின் உழைப்பு பலன் தந்துவிட்டதை உணரமுடிகிறது!

குறிப்புச் சொற்கள்